Monday, April 26, 2010

தெரு பாட்டுக்காரன்

வெகு ஜன இரைச்சலின் ஊடேயும்
தேன் குரலில் காதில் வந்து
பாயும் உன் கானங்கள்
கொடுக்கும் மகிழ்ச்சிக்கு
நன்றி சொல்ல
வார்த்தைகள் உண்டு
ஆனால் என்னிடம்
வாய் இல்லை
கை கூப்பினேன்
பார்க்க உன்னிடம்
பார்வையே இல்லை.

Wednesday, April 21, 2010

கத கேளு கத கேளு... தொடர்பதிவு

அக்பர் அண்ணன் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அது சிறுவயதில் கேட்ட கதை, கேட்ட அனுபவங்களை பற்றி எழுத வேண்டும். நான் ஊருக்கு சென்றதால் என்னால் எழுத தாமதமாகிவிட்டது.

எல்லோரும் கவனமா உம்உம் கேட்கணும் என்ன...

ஒரு ஊர்ல ஒரு நரியாம்; அதோடு கதை சரியாம்.

,

Tuesday, April 20, 2010

முட்டை குழம்பு

அன்புமிக்க தோழ தோழிகளே !! உங்கள் அனைவருக்கும் ஸலாம் சொல்லிக்கிறேன். என்னடா இவள் இத்தன நாள் எங்கே காணோமென்று நீங்கள் கேட்பது புரிகிறது. நான் ஊருக்கு அம்மா வீட்டுக்கு சென்றபடியால் என்னால் பதிவு எழுதமுடியவில்லை. இருந்தாலும் தினமும் என்பக்கத்துக்கு வந்து சென்ற உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று எளிமையான முறையில் முட்டைக்குழம்பு வைப்பது பற்றி
இங்கே காணலாம். இந்த அவசரயுகத்தில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் சமையல் செய்வது கொஞ்சம் கஷ்டமானதுதான். இந்த முட்டைக்குழம்பு எளிதில் செய்துவிடலாம். சுமார் ஒரு 1/2 மணிநேரம்தான் ஆகும்.

இந்த முட்டைக்குழம்பு 2 பேர் சாப்பிடும் அளவுக்கு... வீட்டில் உள்ளவர்களை பொறுத்து அளவுகள் மாறலாம்.

தேவையான
பொருள்கள் :


முட்டை 4
வெங்காயம்
2

தக்காளி
2
மிளகாய் 3
இஞ்சி சிறிதளவு
பூடு 4 பல்
கொத்தமல்லி
இலை சிறிதளவு

கரம்
மசாலா 2 ஸ்பூன்

உப்பு
தேவையான அளவு

முதலில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூடு, மிளகாய், மல்லி இலை, கரம் மசாலா எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

பின்னர் வாணலியில் பாத்திரத்தில் எண்ணை விட்டு அரைத்து வைத்தவற்றை பாத்திரத்தில் கொட்டி நன்றாக கொதிக்கவைக்க வேண்டும்.
முட்டையை உடைத்து பாத்திரத்தில் கொட்டிவிட வேண்டும். முட்டை வெந்ததும் மல்லி இலையை தூவி இறக்கிவிட வேண்டும்.


இப்போது முட்டைக்குழம்பு தயார். எளிமையா இருக்கா..

நீங்களும் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

உங்கள் மின்மினி.

,

Tuesday, April 6, 2010

பட்டாம்பூச்சி பறக்குது - பதின்ம நினைவுகள் தொடர் பதிவு

மலிக்கா அக்கா அவர்கள் என்னை ஒரு பதின்ம வயது நினைவுகள் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அவருக்கு என் நன்றிகள்.

இங்க பாருங்க.. கொசுவத்திய சுத்துகிறது.

எனக்கு சின்னவயசு இருக்கும்போது நாங்க தக்கலைக்கு பக்கத்தில் உள்ள ஊரில்தான் இருந்தோம். அதான் எங்கம்மா ஊரு. அங்குதான் எங்க அம்மம்மா, மாமாமார்கள் எல்லோரும் இருந்தார்கள். சொந்த ஊர்ல வீட்டு பிரச்சனை இருந்ததால் நாங்களும் அங்கு குடியிருந்தோம். அப்ப நானும் எங்கக்காவும் பக்கத்தில் இருந்த பள்ளிக்கு செல்வோம். எங்க மாமா பசங்களும் ஒன்னாத்தான் படித்தாங்க. எங்க பக்கத்துவீட்டுல உள்ள பொண்ணு என்மேல பாசமா இருப்பாள். நானும் அவளும்தான் எங்கேயும் செல்வதுண்டு. மாமா பசங்க, நான், எங்கக்கா தம்பி எல்லோரும்சேர்ந்து விளையாடுவோம். சேட்டை பண்ணுறதுல நாந்தான் முதல்ல..

நாங்க இருந்த பக்கம் மூங்கில் தோட்டங்கள் நிறைய உண்டு. ஒரு தடவை நானும் என்மாமா பொண்ணும் பள்ளிக்கு செல்லும்போது மூங்கில் தோட்டத்து வழியா செல்லும்போது மாமா பொண்ணு வழுக்கி விழுந்திட்டாள். என்னடி என்னாச்சி ஏன் பார்த்துவரக்கூடாதா என்று தூக்கும்போது அய்யோ அம்மா என்று அலறிவிட்டேன். பார்த்தால் 4 அடி பாம்பு ஒன்று கீழே படம் எடுத்து இருந்தது. அப்போது அந்த வழியா போனவர் எங்கமாமாவுக்கு தெரிந்தவர். உடனே அவர் அருகில் கிடந்த கட்டையை எடுத்து அதன் தலையில் ஓங்கிஒரு போடு போட்டார். அதற்குள் சத்தம் கேட்டு எல்லோரும் ஓடிவந்து எங்களை காப்பாற்றிவிட்டனர்.

அங்கே தான் ஐந்தாம்வகுப்பு வரை படித்தேன். அந்த ஸ்கூல்ல மலையாளம் கத்துக்கொடுத்தார்கள். எனக்கு மலையாளம் ஓரளவுக்கு எழுதபடிக்க தெரியும். இதை என்கணவரிடம் சொன்னேன். மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். கல்ப்பில் இருப்பதால் என்கணவருக்கும் மலையாளம் தெரியும்.

பின்னர் சொந்த ஊருக்கே சென்றுவிட்டோம். அங்கு சென்றதும் என்சேட்டைகளை விட்டபாடில்லை. பாட்ஷா அப்பா தோட்டத்துக்கு சென்று விளையாடுவது பிடித்தமான ஒன்று.

எங்க தெருவில் இருக்கும் ஆபிதா ஜன்னத் இவர்கள்தான் என்னுயிர்தோழிகள். என் அக்கா அருகில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தாள். நானோ எங்க வீட்டிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பெண்கள் பள்ளியில் படித்தேன்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் படிக்கும் தோழி ரொம்ப நல்லாப்படிப்பாள். நல்ல பொண்ணு.., அவள் ஒரு பையனை காதலித்தாள். அவனும் காதலிப்பாதாக சொல்லியிருந்தானாம். எனக்கு சந்தோசமாக இருந்தது. அந்த சந்தோசம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. அவனுக்கு அவங்க வீட்டில பொண்ணு பாத்திருக்காங்க. இவன் தன்காதலை பற்றி வீட்டில் தெரியப்படுத்தவில்லை. இவள் கேட்டதுக்கு எங்கம்மா பார்க்கிற பொண்ணைத்தான் கல்யாணம் கட்டிக்கிவேன்., என்று என் தோழியை மறந்து விட்டான் படுபாவி.

இவள் மனம் ஆற்றாமல் தற்கொலை செய்து கொண்டாள். எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. பணக்காரபெண் கிடைத்தவுடன் என்தோழியை மறந்த அவனெல்லாம் ஒரு மனுசனா.. என்னால் இந்த சோகத்தை மறக்கமுடியவில்லை. இந்த சோகவடு மறைய சிறிதுகாலம் ஆனது.

பின்னர் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. கணக்கு பரிட்சை அன்று அவசரத்தில் ஹால்டிக்கெட் வீட்டில் மறந்துவிட்டேன். டீச்சர் ஹால்டிக்கெட் கொண்டுவந்தால்தான் உள்ளே விடுவேன் என்று கறாராக சொல்லிவிட்டார்கள். பக்கத்துல வீடு இருந்தால் எடுத்துட்டு வந்திடலாம்; ரொம்ப தொலைவு. நடக்ககூடிய காரியமா.. டீச்சரிடம் நிலைமையை விளக்கியும் உள்ளே விடவில்லை. எனக்கு ஒன்றும் தோன்ற‌வில்லை. டீச்சர் கொஞ்சம் தள்ளி சென்றதும், தைரியத்துடன் என் இருக்கையைத்தேடி போய் உக்கார்ந்து எழுத ஆரம்பித்தேன். டீச்சர் கவனிக்கவில்லை.

பின்னர் டீச்சர் செக்பண்ண வரும்போது உன்னை ஹால்டிக்கட் எடுத்துவர அனுப்பினேனே.., ஆமா டீச்சர் நான் அப்போதே வந்திட்டேனே என்றேன். ஆம் சரி என்று சென்றுவிட்டார். நல்ல வேளை டீச்சர் ஹால்டிக்கெட் செக் பண்ணவே இல்லை. நானும் நல்லபடியாக தேர்வு எழுதி முடித்தேன்.

சிறுவயது ஞாபகங்களை நினைத்து பார்க்கும்போது உள்ள சுகமே தனிதான். கல்யாணமான புதிதில் மறுவீட்டு அழைப்புக்கு எங்கம்மா ஊருக்கு அவருடன் சென்று நான் சிறுவயதில் சுற்றித் திரிந்த இடங்களையும் குறும்பு செய்ததையும் நினைத்து பார்த்தேன். மிக அருமையான நினைவுகளை கணவருடன் பகிர்ந்து கொண்டது மிகுந்த சந்தோசமாக இருந்தது. இப்போது உங்களுடனும் பகிர்ந்து கொள்வது எவ்வளவு சந்தோசமாக உள்ளது தெரியுமா..

இந்த தொடரை எழுத அழைத்த மலிக்கா அக்காவுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் மின்மினி.

Saturday, April 3, 2010

கோதுமை பணியாரம்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அனைவருக்கும் ஸலாம் சொல்லிக்கொள்கிறேன். நாம் இன்று எளிய முறையில் பணியாரம் செய்வது என்பதை பார்ப்போம்.

கோதுமையில் செய்யும் இந்த பணியாரம் ரொம்ப சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

கோதுமை 2 கப்
முட்டை 1
தேங்காய் பால்
சீனி (இனிப்புக்கு ஏற்றமாதிரி)
ஏலக்காய்பொடி சிறிது 1/2 ஸ்பூன்
சோடா உப்பு சிறிதளவு
உப்பு தேவையான அளவு

தேங்காயை நன்றாக துருவி தேங்காய்ப்பால் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கோதுமை மாவில் முட்டை, தேங்காய்ப்பால், சீனி, ஏலக்காய்பொடி, சோடா உப்பு, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவேண்டும். மாவு நன்றாக பதமாக இருக்கவேண்டும்.

பின்னர், வாணலியில் கடாயில் எண்ணைவிட்டு மாவை வடைக்கு தட்டுவதுபோல தட்டி பொறித்து எடுக்க வேண்டும்.

இப்போது அருமையான சுவைமிக்க கோதுமை பணியாரம் ரெடி.

நண்பர்களே!! நீங்களும் வீட்டில் எளிமையான கோதுமை பணியாரம் செய்து சாப்பிடுங்கள்.

படத்தை மேனகா அக்கா பதிவிலிருந்து சுட்டது.

உங்கள் மின்மினி.

,

Thursday, April 1, 2010

நானும் ஏப்ரல் 1ம்...

அன்புள்ள தோழிகளே!! அனைவருக்கும் ஸலாம் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் மின்மினி எழுதும் மடல். இன்று ஏப்ரல் 1ம்தேதி. இந்த தினத்தை பற்றிய வரலாறுகள் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். காலையிலே இதை பற்றிய பதிவு எழுதனுன்னு நினைத்திருந்தேன். ஆனால் வீட்டுவேலைகளினால் எழுதமுடியவில்லை.

ஏப்ரல் 1ம் தேதி வந்தாலே ஒரு ஜாலியோஜாலிதான். அதுவும் பள்ளியில் படிக்கும் போது ரொம்ப ஜாலியா இருக்கும். அடுத்தவங்கள ஏமாத்துறதுல என்னஒரு சுகம். அதுவும் 1ம்தேதி மட்டும்தான் ஏமாத்துனா ஏத்துக்கிருவாங்க. துறுதுறுவென துள்ளித்திரியும் பள்ளிநாட்களை மறக்கவேமுடியாது..

ஏப்ரல் 1ம்தேதி வந்திட்டாலே உசாரா இருக்கணும்.. யாரும் நம்மை ஏமாத்திவிடக்கூடாது என்பதில் விழிப்போடு இருப்போம். காலையில் எழுந்தவுடன் யாரெல்லாம் நம்ம கண்ணுல படுகிறாங்களோ.. அவங்களை எப்படியும் ஏமாத்திடனும். அதேமாதிரி பசங்களெல்லாம் மைபேனா நிறைய மையை ஊற்றிக்கொண்டு பசங்க, பொண்ணுங்க, பெரியவங்க என்றபாகுபாடு இல்லாமல் வெள்ளைச்சட்டையில் மை அடிச்சிவிடுவாங்க. அதனாலே அன்னைக்கு ஒருநாளைக்கு மட்டும் பள்ளிக்கூடம் போகும்போது எல்லோரும் கலர் சட்டைதான் போட்டுட்டு போவோம்.

அதுலயும் மை அடிச்சிடுவாங்க பாவிபசங்க.. சாயங்காலம் அம்மாவிடம் திட்டுவாங்குவோம். என்கூட எங்கத்தெரு பிள்ளைகள் எல்லாம் ஒன்னாத்தான் பள்ளிக்கூடம் போவோம். மாமா உங்க சட்டையில பூரான், பல்லி சொல்லி பயங்காட்டுவோம். உம்மம்மா உன் தோட்டை, கம்மலைக் காணோம்.., ஏட்டி உன் கொலுசை காணோம்.., பஸ்ஸுல ஏறி உக்கார்ந்ததும் டிரைவரிடம் டயர் சுத்துது.., இப்படி சின்ன சின்ன விசயங்களை சொல்லி அந்த ஒருநாளைக்கு மட்டும் ஏமாத்துறது ஒரு சுகமானது.

இப்படி ஒருநாளை ஏற்பாடு செய்த முன்னோர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

உங்களுக்கும் இதுமாதிரி சம்வங்களை இன்றுநினைத்தாலும் மறக்கவே முடியாது.

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை வேண்டி உங்கள் மின்மினி..

,