Friday, May 28, 2010

யூத்புல் விகடனுக்கு நன்றிகள்


அன்புமிக்க தோழ தோழியர்களே!! உங்கள் அனைவருக்கும் முதலில் ஸலாம் சொல்லிக் கொள்கிறேன். நான் நேற்று எழுதிய பஸ் பயணம்‍ - கவனிக்க என்ற இடுகையை யூத்புல் விகடனில் குட்பிளாக்ஸ் பகுதியில் நேற்று வெளியாகியிருக்கிறது. தேர்ந்தெடுத்த விகடன் குழுவினருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தளத்தில் இதுவரைக்கும் 15 இடுகைகளை எழுதி வெளியிட்டுள்ளேன். வலைப்பக்கம் எழுதவந்து இந்த இரண்டு மாதத்துக்குள் என் எழுத்தை பார்த்தும் படித்தும் ஆதரவுகொடுத்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எனக்கு இதுவரை 37 பாலோயர்கள் ஆனது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

எனக்கு எழுதுவதற்கு ஊக்கமும் கொடுத்து சிலபல கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் எனது கணவருக்கு நன்றிகள்.

அதுபோல விருதுகள் கொடுத்து ஊக்குவித்த ஸ்டார்ஜன், ஸாதிகா அக்கா, அக்பர் அண்ணன், ஜெய்லானி, சைவகொத்துப்பரோட்டா, அஹமது இர்ஷாத் ஆகியோருக்கு என் நன்றிகள்.

மேலும் தினமும் என்தளத்துக்கு வருகைதந்து ஆதரவையும் பாராட்டுகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் அனைவருக்கும் நன்றிகள் பல.

யூத்புல் விகடனுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

யூத்புல் விகடனில் வெளியான பஸ் பயணம் கவனிக்க

மீண்டும் அனைவருக்கும் நன்றிகள்.

தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடும் உங்கள் மின்மினி.

,

Thursday, May 27, 2010

பஸ் பயணம் - கவனிக்க

நானும் என்கணவரும் அம்மம்மா வீட்டுக்கு விருந்துக்கு தக்கலைக்கு அருகில் உள்ள ஊருக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து காலையில் 7 மணிக்கே கிளம்பினாலும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வருவதற்குள் எட்டுமணியாகிவிட்டது. பின்னர் அங்கிருந்த சிற்றுண்டி கடையில் சாப்பிட்டோம். சாவகாசமா நாகர்கோவில் பிளாட்பாரத்துக்கு வந்துப்பார்த்தால் கூட்டம் அலைமோதியது. என்னவென்று விசாரித்ததில் பணகுடியில் கோவில் கொடைவிழாவானதால் பஸ்கள் நிரம்பி வழிந்தன.

9.30 மணி தாண்டியும் கூட்டம் அதிகமானதே தவிர குறையவே இல்லை. என்கணவர் போறபோக்கை பார்த்தால் கூட்டம்குறைய வாய்ப்பில்லை. நாம் ஏறிக்கொள்வோம். என்று சொல்லி கூட்டத்தோடு கூட்டமாக ஏறிவிட்டோம். உட்கார இடம் இல்லை. நின்றுகொண்டே வந்தோம். திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவிலுக்கு 25 ரூபாய். பஸ் வேகமாக சென்றாலாவது நிற்கும் பீலீங் வராது. ஆனால் பஸ்ஸோ வெகுமெதுவாக சென்றது எரிச்சலாக இருந்தது. நான் வள்ளியூர் வந்ததும் இடம்கிடைத்து உட்கார்ந்தேன். என்கணவரோ ஆரல்வாய்மொழி வந்ததும்தான் உட்கார்ந்தார்.

தொலைதூரம் செல்ப‌வர்களை முதலில் உட்காரவைத்துவிட்டு பின்னர் மற்ற ஊர்களுக்கு செல்பவர்களுக்கு இடம் ஒதுக்கலாம். அல்லது இதுபோல‌ திருவிழா என்றால் அந்தஊருக்கு தனிபஸ் விடலாம். இதனால் தொலைதூரம் செல்பவர்கள் சிரமமில்லாமல் பயணிக்கலாம். போக்குவரத்துக் கழகங்கள், வசூல் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி பயணிகளை அலைக்கழிக்கிறாங்களே.. கூடுதல் பஸ்கள் இயக்கினால் பயணிகளுக்கு சிரமமிருக்காது.

***********************************

ஒருதடவை எங்கஊருக்கு சென்றுவிட்டு திருநெல்வேலிக்கு திரும்ப‌ பஸ்கிடைக்கவில்லை. அப்போது சென்னை செல்லும் விரைவுபோக்குவரத்து கழக பஸ் வந்தது. எங்கவாப்பா நீங்க இரண்டுபேரும் இந்தபஸ்ல போங்க. வேற பஸ் கிடைக்கிறமாதிரி தெரியவில்லை என்று சென்னை பஸ்ஸில் ஏற்றிவிட்டார். அந்தபஸ் சொகுசுபேருந்து என்பதால் எந்த அசௌகரியமில்லாமல் இனிய பயணமாக இருந்தது.

நாங்கள் வந்தபஸ் திருசெந்தூரிலிருந்து நெல்லை வழியாக சென்னைக்கு செல்வதால் டீசல்போட நெல்லை டிப்போவுக்குள் சென்றது. அந்தசமயம் மார்த்தாண்டத்திலிருந்து சென்னை செல்லும் பஸ் டிப்போவுக்குள் நுழைந்தது. அப்போது அந்த டிப்போ ஊழியர் அந்தபஸ் டிரைவரிடம்,
"எப்பா டாப்புல எதாவது லக்கேஜ் வச்சிருக்கீயா"
"இல்லியே அண்ணே எதுவும் சாமான் இல்லையே"
"அப்படியா மேல எதோ இருக்கிறமாதிரி தெரியுதே"
அப்படியா அண்ணே என்றவாறு டிரைவரும் சிலஆட்களும் மேலே ஏறிப்பார்த்தால் ஒரு பத்து பதிமூன்று வயதில் ஒரு சிறுவன் கம்பியை பிடித்தபடி பம்மிபோய் படுத்துகிடந்தான்.

உடனே எல்லோரும் சேர்ந்து அவனை கீழே இற்க்கினர். கூட்டம் கூடிவிட்டது என்கணவர் உட்பட எல்லோரும் அந்தபையனை சூழ்ந்து கொண்டு வேடிக்கைப் பார்த்தனர். நான் பஸ்ஸில் இருந்தவாறே வேடிக்கை பார்த்தேன்.

விசாரித்ததில் அவன், அவங்க அம்மா அவனை அடித்ததால் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு செல்கிறானாம். உடனே அந்தபஸ் டிரைவர் அட பாவிப்பயலே எங்கேயிருந்துல ஏறினே?. அவன் மார்த்தாண்டத்திலே ஏறிவிட்டானாம். எல செத்தமூதி! எப்படில்லே பஸ் டாப்புல கிடந்தே.. ரோட்டுல எத்தனை திருப்பங்கள் இருக்கு. எவ்வளவு வேகமா வந்திருப்பேன். நான் எத்தனிதடவை பிரேக் அடிச்சிருப்பேன். செத்துக்கித்து தொலைந்திருந்தேன்னா யாருல பதில் சொல்றது. என்வண்டிதான் கிடைச்சுதா.. அண்ணே உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. நல்லவேளை சொன்னீங்க.. இல்லைன்னா என்கதி என்னஆகிருக்கும். என்று டிரைவர் கண்ணீர்மல்க கூறினார்.

அவனுக்கு எல்லோரும் அறிவுரைகள் சொன்னார்கள். பின்னர் டிப்போ அதிகாரிகள், அவனது வீட்டுமுகவரி தொலைபேசி எண் கேட்டு அவனது பெற்றோரை வரவழைக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

எங்கள் பஸ் கிளம்பியது....


டிஸ்கி: மேலே உள்ள பஸ் படத்தில் நான் கிடையாது.., கூகிளில் தேடியது.

,

Monday, May 24, 2010

மங்களூர் விபத்தும் பெண்களும்

அன்புள்ள நண்பர்களுக்கு உங்கள் மின்மினி எழுதும் மடல்.. அனைவருக்கும் ஸலாம் சொல்லிக்கொள்கிறேன். எவ்வளோ நாளாச்சி பதிவு எழுதி.. ஆனாலும் என் தளத்துக்கு தினமும் வருகைதந்து மின்மினி இன்னக்கி எழுதுவா; நாளைக்கி எழுதுவாள் என்று தினமும் வந்தவர்களை பற்றி நினைக்கும்போது என்னை நானே திட்டிக்கொள்வேன்.

மங்களூரில் விமானவிபத்து ஏற்பட்டு 159பேர் பலி என்ற செய்தியை சனிக்கிழமை காலையில் கேட்டபோது ரொம்பவே மனசு பாதிப்பானது. வெளிநாட்டுல சம்பாதிக்க சென்றவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?. எத்தனை எத்தனை பேர் ரொம்பவே ஆவலுடன் மனைவி மக்களை காண வந்திருப்பார்கள். அவர்களுக்கு நேர்ந்த சம்பவத்தை நினைக்கநினைக்க வேதனையாக உள்ளது. அவர்களின் குடும்பங்களின் நிலையை எண்ணிப்பார்த்தால்?.. இறந்தவர்களுக்கு 5 நிமிடம்தான் மரணவேதனை. ஆனால் அவர்களின் குடும்பங்களுக்கோ காலம்பூராவும் வேதனைதான்.

எப்ப என்னநடக்கும் என்று யாருக்கும் தெரியாது?.. இந்த அவசர யுகத்தில் எல்லாமே அவசரம்தான். யாருக்கும் எப்போதும் பொறுமையே இல்லை. பொதுவா வீட்டுல உள்ள ஆம்பளைங்க வெளியில் கடைவீதிக்கு சென்றால் என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு பதறக்கூடியவங்க நாம். அப்படீருக்கும்போது இந்தமாதிரி சம்ப‌வத்தால் பாதிப்புக்குள்ளானவர்களின் மனைவி பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குரியானதே.. அவங்க என்ன பாவம் செய்தார்கள்?..

வெளிநாட்டுக்கு செல்லும் கணவனை தன்னோட நெஞ்சிலே சுமந்து தன் பிள்ளையை வயிற்றிலே சுமந்து கனத்த இதயத்துடன் அனுப்பிவைக்கும் மனைவியின் தியாகத்துக்கு ஈடா எதுவும் உண்டா?.. கணவன் வெளிநாடு சென்றபின் மனைவிகளுக்கு எத்தனை தூங்காத இரவுகள் உண்டு தெரியுமா?.. இந்த சூழ்நிலையில் தன்னையும் கவனித்து தன் பிள்ளைகளையும் கவனித்து குடும்பத்தினரிடையே சகஜமாக அன்னியோன்னியமாக இருந்து குடும்பத்தை கவனிக்கும் பெண்கள் எத்தனை துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்?..

கணவன் வெளிநாடு சென்றபின் அம்மாவீட்டுக்கும் புகுந்தவீட்டுக்கும் மாறிமாறி ஏதோ வனவாசம் செல்வதுபோல அங்குமிங்கும் செல்லும் பெண்களின் நிலை?.. இதில் அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்கள் குழந்தையை கவனிப்பதில் நேரத்தை செலவிடுவார்கள். ஆனால் குழந்தை இல்லா பெண்கள்?...


இப்படி ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு எதிர்பார்ப்புகள்? எல்லாம் கேள்விக்குரியானது என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது.

எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு மனநிம்மதியையும் நல்ல சூழ்நிலையையையும் தருவான் என்று அனைவரும் பிராத்திப்போமா.. ஆமீன்.

விபத்தில் இறந்த‌வர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்., கண்ணீர் அஞ்சலிகள்.

,

Monday, May 10, 2010

ஒரு கப் காப்பி கிடைக்குமா?.

அன்புள்ள தோழ தோழிகளே!! அனைவருக்கும் ஸலாம் சொல்லிக்கொள்கிறேன். இப்போது எந்தநோய் எந்தரூபத்துல வருதுன்னு யாருக்கும் தெரியாது. தினமும் புதுபுது நோய்கள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த காலத்துல எல்லாம் நிறைய நாட்கள் உயிரோடு இருந்திருக்காங்க. ஏன் நம்மால் அவ்வளவு நாட்கள் உயிரோடு இருக்கமுடியவில்லை. எல்லாம் நம்மோட உணவு பழக்கவழக்கங்கள்தான் காரணம் என்று அடித்து சொல்லலாம்.

முன்னோர்கள் சாப்பிட்டதுபோல சத்தான உணவுகளை சாப்பிடாததுக்கு நிறைய காரணங்களை சொல்லலாம். இன்றைக்கு இருக்கிற விலைவாசியினாலே நமக்கு மயக்கம் வந்துவிடுகிறது. பிறகு எப்படி?.. யாரையும் குறை சொல்லமுடியாது. அதனால் நமக்கு கிடைத்திருக்கும் கொஞ்ச வாழ்நாளில் நலமோடு வாழ்வது ரொம்ப ரொம்ப முக்கியம். ஒவ்வொரு சின்னசின்ன விசயங்களில் கவனமாக இருக்கவேண்டும்.

தினமும் காப்பி குடித்தால் புற்றுநோயும் சர்க்கரை நோயும் வராது என்று இணையத்தில் படித்தேன். அதனை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


புற்றுநோயைத் தவிர்க்க பழங்களும், காய்கறிகளுமே முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வந்தனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதற்கு சமமாக காப்பியை இப்போது சிபாரிசு செய்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது காப்பி குடிக்க வேண்டுமாம்.

புற்றுநோயை எதிர்த்துப் போராடும் “ஆண்டி ஆக்சிடென்ட்” காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது. குறிப்பாக ஆப்பிள், தக்காளி போன்றவற்றில் இந்த “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளதால் அதை சாப்பிட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறிவந்தனர். ஆனால் இப்போது காப்பியிலும் “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். காய்கறி, பழங்களில் இருப்பதற்கு ஈடாக காப்பியிலும் உள்ளது என்று கூறுகின்றனர்.

அமெரிக்காவில், பென்சில்வேனியா நகரில் உள்ள ஸ்க்ராண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோ வின்சன் இதுபற்றி ஆராய்ந்து சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர். “மற்ற உணவுகளில் உள்ள “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” அளவு போதுமானதாக இருந்தாலும், அவை உடலில் கழிவாக ஓரளவு போய்விடுகிறது. ஆனால் காப்பியில் உள்ள “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” அளவு, உடலில் எந்த சூழ்நிலையிலும் கரையாமல் அப்படி பலன் தருகிறது.” என்று கூறினார்.

“புற்றுநோய்க்கு மட்டுமல்ல, இரண்டாம் வகை சர்க்கரை நோய், பர்கின்சன் நோய் போன்றவை வராமல் தடுக்கவும் காப்பி பயன்படுகிறது. ஒரு நாளைக்கு நாலைந்து முறை முறை காப்பி குடிப்பது நல்லது தான். ஆனால் காப்பி பிடிக்காதவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது காபி குடிப்பது நல்லது. காப்பின் எடுத்த காபியாக இருந்தாலும் சரி, காப்பின் அகற்றாத காப்பியாக இருந்தாலும் சரி, அதில் “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளது.” என்றும் பேராசிரியர் வின்சன் கூறினார்.

பிரிட்டிஷ் காபி தயாரிப்பாளர்கள் சங்கம் கூறுகையில், “காபி குடிப்பது என்பது கெடுதல் இல்லை. அப்படி சிலர் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு நான்கு, ஜந்து முறை காப்பி குடித்தால் கூட நல்லது தான் என்று நிபுணர்களே கூறிவிட்டனர். பழம், காய்கறிகளை உணவில் சரிவர சேர்க்க விரும்பாதவர்கள், குறைந்த பட்சம் காப்பி குடித்தாவது நோய்களை தவிர்க்கலாம்” என்று கூறியுள்ளது.


எனவே நாம் தினமும் காப்பி குடித்தால் நல்லதென்று சொல்றாங்க. நாம் நலமோடும் வளமோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் நமக்கு நல்லருள் புரிவானாக.

அன்புடன் உங்கள் மின்மினி.

,

Tuesday, May 4, 2010

என்ன விலை?..


எங்கோ பெய்யும் மழையின்
சாரல் துளியாய் என் மனம்
அலைபாயுது அன்பே உன்னாலே
பூவாய் மலராய் பெண்மையின்
வெட்கம் என்னைத் தாலாட்டுது
உன்னருகே வர மனம் நாடுது
பேசும் நீ பேசும் அழகுக்காக‌
ஒவ்வொன்றையும் விலை
பேசுகின்றேன் பேரமில்லாமல்..


கவி எழுத பாடல்
வரிகள் தேடினேன்
வார்த்தைகள் இன்றி
மௌன மொழியாய் உன் கண்கள்
நடனமாட எனக்கோ ஆனந்தமாய்
இதெல்லாம் எப்படி??..
விடையாய் நம்
முதலாம் சந்திப்பில்...


,